சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக ரோபோக்கள் அறிமுகம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இரண்டு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கள் விமான நிலையத்தில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.இதனால், பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான சேவை மையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு மாற்று வழியாக பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் ரோபோக்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக மூன்று மாதங்களுக்கு வாடகைக்காக பெறப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கள் தற்போது, சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த ரோபோக்களை பயணிகளிடம் அறிமுகம் செய்து வைக்கும் வகையில், ரோபோக்கள் பயணிகளுக்கு சுதந்திர வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்புகளை வழங்கியது.

இதனை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதனை தொடங்கி வைத்தனர். ரோபோக்களின் செயல்பாட்டைக் கண்டு பயணிகள் உற்சாகமடைந்தனர்.

இதுகுறித்து சந்திரமவுலி கூறியதாவது: ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யும் பணி மூன்று நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு, ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பை பொறுத்து, ரோபோக்களின் சேவை நிரந்தரமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>