நீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில், இருக்கை ஒதுக்கீட்டில் நீதிபதிகள் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில், கடந்த 12 -ஆம் தேதி, உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானியின் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு சென்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, முன் வரிசையில் இடம் ஒதுக்காமல், பின் வரிசையில் இடம் ஒதுக்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர். அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக இருந்தன.

ஆனால், தலைமை நீதிபதி உள்ளிட்ட 6 உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தேநீர் விருந்துக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானியை அழைப்பதற்காக நேரில் சென்ற, ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், அவரிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், தலைமை நீதிபதியை தொலைபேசி மூலம் ஆளுநர் பன்வாரிலால் தொடர்பு கொண்டு, நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்ததாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News >>