வண்டலூரில் மரப்பூங்கா திறப்பு... சிங்கார சென்னைக்கு புதிய வரவு

தமிழகத்தில் முதல் முறையாக வண்டலூரில் ரூ.2. கோடி செலவில் புதிய மரப்பூங்கா பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபையில், விதி எண் 110-ன் கீழ் மரப்பூங்கா அமைப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சென்னையை அடுத்துள்ள வண்டலூர், அறிஞர் அண்ணா உயி ரியல் பூங்கா அருகே, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள வன ஆராய்ச்சி பிரிவு மூலமாக வன மரபியல் வளங்களைப் பாதுகாக்க, 8 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வளர்ந்து வரும், 300 மரத்தாவர வகைகள் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு, மரபியல் வளங்கள் கொண்ட மரப்பூங்கா ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த மரப்பூங்கா மரபியல் வளங்களைப் பாதுகாப்பதுடன், தாவரவியல் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக வன ஆராய்ச்சி பிரிவின் 100வது ஆண்டையோட்டி இன்று மரப்பூங்கா திறக்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில், தாவரங்களின் செயல் விளக்கக் கூடம், செயற்கை நீரூற்று, இருக்கை வசதி போன்ற வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. பூங்காவில் ஒவ்வொரு தாவரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் எளிதில் சுற்றிப் பார்க்கும் வகையில் மரப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ருத்ராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பலா, வில்வம், கடுக்காய், நெல்லி, பலா, பன்னீர், இரும்பு, ஈட்டி, புன்னை, செண்பகம், வெண்தேக்கு, பாதிரி, மாவிலங்கம், வேங்கு, இலுப்பை, கருங்காலி, கொடுக்காய்ப்புளி, செங்கடம்பு, தும்புலிமரம், நாவல், நெட்டிலிங்கம் உள்ளிட்ட, 300 வகையான மரங்கள் இடம் பெற்றுள்ளன. 300 மரங்களுக்கும், 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் வகையில் சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

More News >>