கேரளாவுக்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்தது மத்திய அரசு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன.

இதைதவிர, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகள் நிதி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த 600 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று கேரள அரசுக்கு வழங்கியது.

இதைதவிர, வெளிமாநிலங்களில் இருந்த கேரளாவுக்கு வரும் நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், திருச்சூர், பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26ம் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

More News >>