தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடல்...

மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் வழியில், நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு நடந்து முடிந்தது. ஐந்து கட்டமாக நடந்த கலந்தாய்வில், 72,648 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. 97 ஆயிரத்து 980 இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் கல்லூரிகள் வாரியாக நிரம்பிய இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த கல்வியாண்டில் 550 பொறியியல் கல்லூரிகள் இருந்து நிலையில், நடப்பாண்டில் அது 487 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் 63 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் கல்லூரிகள் முதல், முன்னணி தனியார் கல்லூரிகள் வரை, முதல் 30 கல்லூரிகளில் மட்டும் அதிகபட்ச இடங்கள் நிரம்பியுள்ளன.

120 கல்லூரிகளில், 50 முதல் 100 இடங்கள் வரை மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 47 கல்லூரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில் 9 ல் துவங்கி, ஒரே ஒரு மாணவர் வரை சேர்ந்திருக்கின்றனர். இந்த 47 கல்லூரிகளும் இந்த ஆண்டே மூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அண்ணா பல்கலைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால தாமதமாக கலந்தாய்வை துவக்கியது, ஆன்லைன் கலந்தாய்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் திணறல், பொறியியல் படித்தாலும் வேலை கிடைக்காத சூழல் உள்ளிட்ட காரணங்களால், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என கல்வியாளர்கள் கருத்து கூறுகின்றனர்.

More News >>