ஷெட்டில் காக் வீரரானார் முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் பசுமைவெளி பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி சிறிது நேரம் இறகு பந்து விளையாடினார்.  சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டலம் தர்மநகர், முல்லை நகர், கிழக்கு மேம்பால நகர், அபிராமி கார்டன், அஸ்தம்பட்டி மண்டலம் பிரகாசம் நகர், பரமன் நகர், குறிஞ்சி நகர், கம்பர் தெரு, அம்மாபேட்டை மண்டலம் அய்யாசாமி பார்க், யெல்லீஸ் கார்டன் ஆகிய இடங்களில் 5 கோடி 7 லட்சம் மதிப்பில் 12 பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.   பூங்காக்களில், நடைபயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகள், 8 வடிவிலான நடைபயிற்சி மேடைகள், தியான மண்டபம், மூலிகை பண்ணைகள், இறகு பந்து, கூடைபந்து விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த பூங்காக்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் சிறிது நேரம் பூங்காவில், முதலமைச்சர் பழனிசாமி இறகு பந்து விளையாடினார்.    தொடர்ந்து, சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடியே 38லட்சம் மதிப்பீட்டில் 55 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டன. பின்னர், பிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம் விழிப்புணர்வு பிரசார முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.    அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர் ரோகிணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More News >>