விடைத்தாள் முறைகேடு: 2 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை

அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள் மறுகூட்டல் முறைகேடு விவகாரத்தில், 2 பேராசிரியர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   தேர்வு விடைத்தாள் மறுகூட்டலில் அதிக மதிப்பெண் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட பேராசிரி யர்கள் 10 பேர் மீது 8 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களது வீடுகளிலும், பல்கலைக்கழக அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.   திண்டிவனம், விழுப்புரம், கோட்டூர்புரத்தில் நடந்த சோதனையில் 80க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.    அந்த வரிசையில் திண்டிவனம் மண்டல அதிகாரியும், உதவி பேராசிரியருமான விஜயகுமார் மற்றும் உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர். ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.    தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீதான குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரங்களை அளிக்க தவறியதால் குற்றச்சாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள மண்டல அதிகாரி விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோரை விசாரித்து அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை முன்னோக்கி கொண்டு செல்ல லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More News >>