குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற இரக்கமற்ற தாய்

குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை தாயே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த விஜய், குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி.இவர்களுக்கு அஜய் என்ற மகன், காருணிகா என்ற மகள் உள்ளனர்.    விஜய், இரவு பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற விஜய், வாயில் நுரை தள்ளியபடி 2 குழந்தைகள் படுக்கையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்த போது குழந்தைகள் இறந்தது தெரியவந்துள்ளது.    குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். மனைவியை தேடிய போது வீட்டில் இல்லை. இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.   அங்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விஜய்யின் மனைவி அபிராமி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தப்பி இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.   அபிராமி எப்போது வீட்டில் இருந்து வெளியே சென்றார்? எங்கு சென்றார்? குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தாயே குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
More News >>