மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை

சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் உள்ளிட்டோர் செருப்படி கொடுத்துள்ளனர்.

மெய்யனூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 24 வயதுடைய சதீஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளன்ர்.

இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆசிரியர் சதீஷ் மாணவிகளிடம் தொர்ந்து, சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர்களும் மாணவிகளின் உறவினர்களும் பள்ளிக்கு வந்தனர்.

அவர்கள் பள்ளிக்கு வந்து, ஆசிரியர் சதீஷை வெளியே இழுத்து வந்து, பள்ளியின் நுழைவு வாயில் முன்பு வைத்து அவரை சரமாரியாக செருப்பால் அடித்தனர். இதனால் அலறிய சதீஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மடக்கிப்பிடித்து மீண்டும் அடித்து உதைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் ஆசிரியரை அங்கிருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் சதீஷ் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து, ஆசிரியரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>