நெல் கொள்முதல் நிலையங்களை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்

நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாய அமைப்புகள் செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவர். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றம்சாட்டுகிறேன்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்.” என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>