எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்

பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன். இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும்.எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள மில்மேடு கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் மணமக்கள் வீடு கோலாகலமாக இருந்தது. திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா இன்னும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை ரத்தினசாமி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் "எனது மகள் அவளது அக்கா வீட்டுக்கு போய்வருவதாக கூறி கொண்டு சென்றவள் எங்கு சென்றாள்? என்று தெரியவில்லை. அவளை கண்டு பிடித்து தாருங்கள்" என்று கூறி உள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மாயமான சந்தியாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ திருமணம் செய்ய இருந்த பெண் காணாமல் போன சம்பவம் மில்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>