கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த இசைப்புயல்

கனமழையின் எதிரொலியால் வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

தற்போது மழை இல்லாததால், கேரளாவில் சீரமைப்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கேரளாவை மீட்டெடுக்கும் விதமாக நாடு முழுவதிலிருந்தும் பலர் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1 கோடி வழங்கி அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓர்லான்டோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை விழாக்களை நடத்தி அதன்மூலம் கிடைத்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிக்கப்படும் என்று ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். அதன்படி, ரூ.1 கோடிக்கான காசோலையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்தி வரும் என் சக கலைஞர்களும், நானும் சேர்ந்து கேரள மக்களுக்கு செய்யும் சிறு உதவி. இதன்மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

More News >>