இயக்குநர் சங்கருக்கு ரூ.10,000 அபராதம்...

எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குநர் சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2010ல் வெளியான எந்திரன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை அனைத்தும் தன்னுடையது எனக் கூறி, ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"படத்தின் கதை தன்னுடையது என அறிவிக்க வேண்டும்.காப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது. தம்மிடம் கூடுதல் ஆவணங்கள் இருப்பதாகவும், அதனை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என இயக்குனர் ஷங்கர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான எதிர் தரப்பு வழக்கறிஞர், இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More News >>