கர்நாடக உள்ளாட்சி தேர்தல்... காங்கிரஸ் கொண்டாட்டத்தில் அமில வீச்சு

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.

கர்நாடகா மாநிலத்தில், கடந்த மாதம் 105 நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. தும்கூர் மாநகராட்சியின் 115 வார்டுகளுக்கான தேர்தலில் பாஜக 24 இடங்களிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 51 இடங்களையும் கைப்பற்றியது.

இதில் 16வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இனயதுல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் இனயதுல்லா மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார். அருகில் இருந்த அவரின் ஆதரவாளர்கள் 9 பேரின் மீதும் ஆசிட் பட்டது.

இதனால் 10 பேரும் எரிச்சலை உணர்ந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இனயத்துல்லா முகத்தில் அதிகப்படியான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் லேசான காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக தும்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

More News >>