அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்டு காணாமல்போன மணப்பெண் மீட்பு

பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன மணப்பெண்ணை அவரது தோழியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ். ஈஸ்வரன் எம்எல்ஏ (43). இவருக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுக்கு வரும் 12ம் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி சந்தியா அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தியாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சந்தியா தலைமறைவாக உள்ள இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள தனது தோழி வீட்டில் மறைந்து இருந்த சந்தியாவை போலீசார் கண்டுபிடித்து கோபி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, சந்தியாவை போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

More News >>