ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க வேண்டும் என ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.,   இந்தநிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டில், 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   இந்த தீர்ப்பிற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, ஓரினசேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.    இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.    "இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல. ஒவ்வொருவரின்  தனித்துவத்திற்கும்  மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.இந்த விஷயத்தை பல்வேறு  கோணங்களில் விசாரித்த பிறகுதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது, மரணத்திற்கு நிகராகும்." என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.     வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
More News >>