பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

கரகாட்டக்காரன், ராஜாதிராஜா, வைதேகி காத்திருந்தாள், அலைகள் ஓய்வதில்லை, கோட்டை மாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் வெள்ளை சுப்பையா (78). இவரது மனைவி சாவித்திரி. இவர்களது மகள் தனலட்சுமி கணவருடன் குவைத்தில் வசித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த வெள்ளை சுப்பையா, திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரைகளிலும் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் இவர் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளை சுப்பையாவிற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெள்ளை சுப்பையா நேற்று இரவு 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

More News >>