அரசு பள்ளியில் உயர் தொழில்நுட்ப வகுப்பறை வசதி... மாணவர்கள் குதூகலம்

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.

அங்குள்ள குப்பாம்பட்டி 1835 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட அரசு பள்ளி 2009 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் 130 மாணவ- மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதனால் அதிக உற்சாகமான மாணவர்கள் விடுமுறையின்றி பள்ளிக்கு வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆசிரியர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டுக்கான புதுமை பள்ளி விருது கிடைத்துள்ளது. விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பு 70 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 6 முதல் 8ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளியை விஞ்சிய குப்பாம்பட்டி நடுநிலைப்பள்ளி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

More News >>