பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் பகிரங்க கொலை மிரட்டல்

மதுரை சிறைத்துறை எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ் மீது கெலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்றிரவே அவர் நன்னடத்தை விதி காரணமாக விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த அண்ணன், தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த புல்லட் நாகராஜ், பெண் எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பத்திரிக்கையாளர் என தன்னை அடையாள படுத்தி கொண்ட ரவுடி, "சிறைக்குள் கஞ்சாவை மூட்டை மூட்டையாக விற்றவன் நான்.என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. இப்ப பேசறேன்லே... ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது."

"நீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க.. அப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையாக இருக்கீங்க... திருந்துங்க.." என்று பகிரங்கமாக புல்லட் நாகராஜ் மிரட்டல் விடுக்கிறார்.

எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

More News >>