பீகாரில் பரபரப்பு: மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை

பீகார் மாநிலத்தில் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற மூன்று பேரை பொது மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம், பெகுசரை மாவட்டத்தில் நாராயணிபூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி படித்து வருகிறார். சிறுமி நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது, துப்பாக்கி உள்ளிட்டு ஆயுதங்களுடன் பள்ளிக்கு நுழைந்த மூன்று பேர் சிறுமியை கடத்த முயன்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மர்ம நபர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்கள் ஆசிரியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டினர்.

இதற்கிடையே, பள்ளியில் இருந்து தப்பிய சில மாணவர்கள் கிராமத்தினரிடம் விஷயத்தை கூறினர். இதனால், கோபமடைந்த கிராம மக்கள் கம்பு, கற்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு விரைந்தனர். அங்கு, பொது மக்களை கண்டதும் தப்பிக்க முயன்ற மூன்று பேரையும் மடக்கி அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், படுகாயங்களுடன் விழுந்துக் கிடந்த மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>