நிலப் பிரச்னை - காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரிக்கை!

காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் செய்தி வைரலாகி வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க ஏற்பாடு செய்ய காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தங்களை போன்ற நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்துகொள்ள காலா படத்தை பார்க்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த செய்தியை காலா பட இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஷேர் செய்துள்ளார்.

காலா படத்தில், மும்பை தாராவி பகுதியில் வாழும் அடிதட்டு மக்களை வெளியேற்றி, அங்கே பெரிய கட்டடங்களும், வணிக வளாகங்களும் கட்ட நானா படேகர் பல சூழ்ச்சிகளை செய்வார்.

அதனை காலா ரஜினி தடுக்க போரிட்டு, உயிரை துறந்தாலும், நிலத்தின் மீதான உரிமையை மக்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்கு விதையாக வீழ்வதாக அமைந்திருக்கும்.

இதனை முன் உதராணமாக காட்டி, நிலத்தை இழக்கும் மனிதர்களின் கஷ்டத்தையும் வலியையும் காட்ட திரைப்படத்தை பயன்படுத்தும் ஸ்ரீதரின் புதிய யுக்தி, இணைய தளங்களில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.

நீதிபதிகள் அவரது கோரிக்கையை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

More News >>