விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

187 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 'விஜயா' என்ற ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடலோர காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனம் இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன 7 ரோந்து கப்பல்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது.

'விக்ரம்' என்ற முதலாவது கப்பல் கட்டுமானம் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாவதாக விஜயா கப்பல். கடந்த ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8 மாதங்களாக ஆயுதங்கள் மற்றும் நவீன கருவிகள் இணைக்கும் பணி நடந்தது.

இந்நிலையில், பணிகள் முழுமை பெற்றதை தொடர்ந்து, விஜயா கப்பல் சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

விஜயா ரோந்து கப்பல் 2200 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது.

மேலும் ஒரு முறை எரிப்பொருள் நிரப்பினால் சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஹெலிக்காப்படர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கருவி அதி நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ள . இக்கப்பலின் பெரும்பான்மை பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். ஒரே நேரத்தில் 102 பேர் பயணிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரோந்து கப்பல் விஜயாவை முறைப்படி கடலோர காவல் படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More News >>