அமெரிக்கா கரோலினா பகுதியை தாக்கிய புளோரன்ஸ் புயல்: 4 பேர் பலி

அமெரிக்காவின் கரோலினா என்ற பகுதியை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் அதில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் புளோரன்ஸ் என்ற புயல் உருவானது. இது அமெரிக்காவிவன் கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்ததால், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா உள்ளிட்ட ஆகிய மாநிலங்களில் புயல் தாக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

இதன் எதிரொலியால், மூன்று மாகாண கடலோர பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதிகாரிகள் அறிவித்ததுபோல், நேற்று வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. சுமார் 100 கிமீ வேகத்தில் வீசிய காற்று, ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகளால் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

வடக்கு கரோலினா பகுதியில் புயல் தாக்கி மரம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில், வீடு இடித்து சம்பவ இடத்திலேயே தாய், குழந்தை இருவரும் பலியாகினர். இதேபோல், மேலும் இருவர் புயலில் சிக்கி பலியாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் எதிரொலியாக, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>