மெக்சிகோ சுற்றுலா தலத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவில் உள்ள கரிபால்டி என்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து நேரத்தை செலவிடுவார்கள். அந்த வகையில், நேற்று ஏராளமானோர் இங்கு திரண்டிருந்தனர்.

அங்கு, திடீரென பைக்கில் நுழைந்த மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்த தாக்குதலில், பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே குண்டடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார், காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>