வேலூர் சிறையில் கைதிகளுக்கு உதவிய பெண் காவலர்

வேலூர் மாவட்டம் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மகளிர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த சிறையில், 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார். கேன்டீனுக்கு காய்கறிகளை வாங்கி கொண்டு திலகவதி சிறைக்குள் வந்துள்ளார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்த மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டுள்ளது.

2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகவதியை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. இதுப்பற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகவதி மீது புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து திலகவதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது தெரியவந்தது.

தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார். அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர்.

மேலும், நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகவதியை பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

More News >>