கருணாநிதிக்கு அதிமுக அரசு பிச்சை... அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

மறைந்த, திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அதிமுக அரசு போட்ட பிச்சை என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அவருக்கு மெரினாவில் இடம் வழங்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை" என பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மோசடி செய்து வெற்றிபெற்ற டிடிவி.தினகரன், தனது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடத் தயாரா என்று அமைச்சர் சவால் விடுத்தார். மேலும், அதிமுக அரசின் மீதான எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை பொருட்படுத்தாமல், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் வழங்க தமிழக அரசு மறுத்தது. கருணாநிதிக்கு காந்தி மண்டபத்தில் அரசு இடம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>