கிளி ஜோசியம் பார்ப்பதை நிறுத்துங்க ஸ்டாலின்.. பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்தும், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி திமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மத்தியில் நடைபெறுவது மதவாத ஆட்சி. மாநிலத்தில் நடைபெறுவது அதற்கு துணைபோகும் ஊழல் ஆட்சி."

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி ஒழிந்தாக வேண்டும். தமிழகத்திலுள்ள அடிமை ஆட்சி அழிந்தாக வேண்டும். தேர்தல் வரும் வரை இந்த ஆட்சி இருக்கும் என கருத வேண்டாம்." என கடுமையாக சாடி பேசினார். இதற்கு கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கிளி ஜோசியம் பார்த்தாலே பலிக்காது. ஸ்டாலின் ஜோசியம் மட்டும் பலிக்கவா போகிறது" என்றார்.

"தமிழக அரசு கலைந்துவிட வேண்டும்மென்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது. ஆருடம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, பிரதான எதிர்க்கட்சியாக மாநில மக்களுக்கு செய்ய வேண்டியது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதேபோல் ஸ்டாலினுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை, தமிழக அரசையே சமாளிக்க முடியாத தி.மு.க, 22 மாநிலங்களை ஆளும் மோடி அரசோடு போட்டிக்கூட போட முடியாது" எனக் கருத்து கூறியுள்ளார். அதிமுக- தி.மு.க வார்த்தைப்போர், தற்போது திமுக- பாஜகவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>