ஆந்திராவில் பயங்கரம்: வீடியோ பதிவு செய்துவிட்டு கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

ஐதராபாத்: தனது மரண வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துவிட்டு, 4 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடே பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் நாகமவுனிகா. கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், நாகமவுனிகா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து, பண்டிகையை கொண்டாட நாகமவுனிகா அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடந்த அறையில் சோதனை செய்தபோது, நாகமவுனிகாவின் செல்போனில் அவர் தற்கொலை செய்வதற்கு முன் பேசிய வீடியோ பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ நாகமவுனிகா இந்த விபரீத முடிவுக்கான காரணத்தை தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில், தனது கணவரை எனக்கு பிடிக்கவில்லை என்றும், எங்கள் திருமணத்தின்போது அவருக்கு அளித்த பணம், பொருட்களை திருப்பி வாங்கி விடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவு எடுத்ததற்காக தன்னை மன்னிக்கும்படியும் நாகமவுனிகா தனது பெற்றோரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

More News >>