இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வளைகாப்பில் ஜெயலலிதா

2005 ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் நடைபெற்ற தனது வளைகாப்பு புகைப்படங்களை சசிகலா உறவினர் மகள் கிருஷ்ணப்ரியா ஜெயராமன் வெளியிட்டுள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார்.

இது குறித்து கூறிய இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ”33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்த சசிகலாவை கொலைகாரி என்றும், அம்மாவின் கையை எடுத்துவிட்டார், காலை எடுத்தார்கள் என்றும் பலர் பேசினார்கள்.

கொலைகாரி என்ற பழி வந்தபோதுகூட அம்மாவின் கண்ணியத்துக்கு இழுக்கு வரும் என்பதற்காக இந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை. தற்போது அதனை அவமதிக்கும் வகையில் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளார். சசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரிரு மாதங்களில் வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பின்னால் இருக்கும் கருவிகளை அவரால் திரும்பி பார்க்க முடியாததால் அவர் வீடியோ எடுக்கும்படி கூறினார். ஜெயலலிதா கூறியதன் பேரில் சசிகலா தான் வீடியோவை எடுத்தார்.

சசிகலாவின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். இதுபற்றி தினகரனிடம் இதுவரை பேசவில்லை. ஆனால், வீடியோ வெற்றிவேலிடம் எப்படி சென்றது? என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்பேன்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், 2005 ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் நடைபெற்ற தனது வளைகாப்பு புகைப்படங்களை சசிகலா உறவினர் மகள் கிருஷ்ணப்ரியா ஜெயராமன் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>