இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் அசாம் படம் !

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ரிமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ் ராக்கர்ஸ்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா உலகின் மிகச் சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா, ஆண்டு தோறும் சிறந்த ஹாலிவுட் படங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. ஹாலிவுட்டை தாண்டி சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதினை ஆஸ்கர் வழங்கி வருகிறது.

இவ்விருதை பெற உலக நாடுகள் போட்டி போட்டு, தங்கள் நாட்டின் சார்பாக சிறந்த படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைப்பது வழக்கம்.

அந்த வகையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ள 90வது அகாடமி விருதுகள் விழாவிற்கு, இந்தியாவின் சார்பாக அசாம் மொழியில் வெளியான ‘வில்லேஜ் ராக்கர்ஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வில்லேஜ் ராக்கர்ஸ் கதை:

ஏழ்மையில் வாடும் குழந்தைகள், அந்த ஏழ்மை நினைத்து வருந்தாது, மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழும் அழகிய வாழ்வியலை படமாக தந்துள்ளார் இயக்குநர் ரிமா தாஸ்.

கிட்டார் இசைக் கருவி மீது விருப்பம் கொண்ட சிறுமி, பிளாஸ்டிக் பலூன் கிட்டாரை வைத்துக் கொண்டு, நிஜ கிட்டாரை வாங்கி விட்டது போன்ற மகிழ்ச்சியில், தனது நண்பர்களுடன் விளையாடுவது போன்றும். பெண் குழந்தை என்பதால், ஆண்கள் செய்யும் செயல்களை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு நிறைந்த இடத்தில், அந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து ஆண் பிள்ளைகளுக்கு நிகராகவும் அவர்களுக்கே சவால் விடும் வகையிலும் இவள் செய்யும் குறும்பு சேட்டைகள் நிறைந்த படமாக ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ உருவாகியுள்ளது.

பரிந்துரைக்கப்படாத பத்மாவத்:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான வரலாற்று படமான ‘பத்மாவத்’ ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த படம் பரிந்துரைக்க படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இணையத்தில் கிளம்பியுள்ளன.

அதேபோன்று, ஆலியாபாட் நடிப்பில், வெளியான ராஸி படமும் இந்த ரேஸில் கலந்து கொண்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கரின் இறுதி பரிந்துரை பட்டியலுக்காவது வில்லேஜ் ராக்ஸ்டார் படம் தேர்வாகுமா? என்பதே பெரிய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இறுதி பட்டியலில் இடம்பெற்று, ஆஸ்கரை வெல்ல வாழ்த்துகள் !

More News >>