ஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கிய கார்த்தியின் படக்குழு..

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ பட ஷூட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1.5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் அத்தியாயம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என டபுள் வெற்றியை ருசித்துள்ள கார்த்தி, அடுத்ததாக அறிமுக இயக்குநர் ராஜத் ரவி சங்கர் இயக்கத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் ‘தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தீரன் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

குலு மனாலியில் 140 பேர் கொண்ட குழுவுடன் ’தேவ்’ பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது. ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த 8 நாட்களாக பெய்து வரும் கன மழையால், அங்குள்ள 13 மாவட்டங்கள் பலத்த பாதிப்பை அடைந்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு நடந்த குலு மனாலியிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 140 பேரும் வெள்ளத்தில் சிக்கி, உணவின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் தயாரிப்பாளரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மணனுக்கு 1.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சினிமா விமர்சகரான ராஜசேகர் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

More News >>