திரையிசை கலைஞர் கார் விபத்துக்குள்ளானது: மகள் பலி

கேரளாவின் பிரபல வயலின் கலைஞர் பாலபாஸ்கரின் கார் விபத்துக்குள்ளானதில் அவரது இரண்டு வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

பல பிரபல திரைக்கலைஞர்களுடன் பணியாற்றி வருபவர் பாலபாஸ்கர். 17 வயதில் திரைப்படத்திற்கு இசையமைத்துப் புகழ் பெற்றவர். இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். வயலின் கலைஞரும் பாடகருமான இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்துப் பிறந்த மகள் தேஜஸ்வனி பாலா. தேஜஸ்வனிக்கு தற்போது இரண்டு வயதாகிறது.

மகள் தேஜஸ்வனிக்காக சிறப்பு வழிபாடு செய்வதற்காக திருச்சூர் கோயிலுக்கு பாலபாஸ்கர் குடும்பமாக சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது. செவ்வாயன்று அதிகாலை 4:30 மணியளவில் திருவனந்தபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின்மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

விபத்தில் பாலபாஸ்கரின் மகள் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலபாஸ்கரும் அவரது மனைவியும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவரது மனைவியின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

More News >>