துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், மற்றும் காயமடைந்து ஊனமடைந்த 9 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகையாக தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர், காயமடைந்ததால் ஊனமுற்ற 9 பேர் உட்பட மொத்தம் 19 பேருக்கு அரசுப்பணிக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

More News >>