ஏழைப்பெண்ணின் வீட்டுக்கே சென்று பணிஆணை தந்த மாவட்டஆட்சித்தலைவர்!

பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த 19 வயது இளம் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா. சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2014 -ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி, அபி, மற்றும் மகன் மோகன் ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 24ந் தேதி பாட்டி ராணியும் இறந்து விட்டதால் திக்கற்ற நிலையில் தவித்த ஆனந்தி கலெக்டரை சச்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அப்பொழுது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில் "19 வயதுள்ளவருக்கு அரசுப் பணி வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை, எனினும் தமிழக அரசு தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

நேற்று கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தன்னிடம் மனு அளித்த ஆனந்தியின் வீட்டிற்கே சென்றார். அப்போது ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பி ஆகியோரின் படிப்புக் குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் அவரது வீட்டிலேயே மதிய உணவை அருந்திய கலெக்டர், ஆனந்தியிடம் "உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்கவந்துள்ளேன்" என்றார்.

தொடர்ந்து பணி உத்தரவினை ஆனந்தியிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்துப் பெற்றார்.

More News >>