சாக்கடையில் தூக்கிவீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலமாக கண்டெடுப்பு

சேலம் மாவட்டத்தில், சாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு வடக்கு மசூதி தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இதன் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கால்வாய்க்குள் தொப்புள் கொடி எடுக்காத நிலையில் பச்சிளம் குழந்தை துணியால் சுற்றப்பட்ட சடலமாக கிடந்தது. இதனை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், குழந்தை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆன நிலையில், கால்வாயில் தூக்கி வீசியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>