ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு- கர்நாடகா கோரிக்கை நிராகரிப்பு

சொத்து மேல்முறையீடு வழக்கில், ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடகா அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா மறைந்ததால், அவரையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

More News >>