ஓட்டுறது ஜாகுவார்... துப்புறது? - விநோத விபத்து

சொகுசு காரை ஓட்டி வந்த வாலிபர் குட்காவை துப்பியதால் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.

நொய்டா பெருநகர பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் கஸானா (வயது 27). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வியாழன் இரவு ஏழு மணியளவில் நொய்டா துரித நெடுஞ்சாலையில் இவரது கார் விபத்துக்குள்ளானது. "அதிவேகத்தில் ஜாகுவார் காரை ஓட்டி வந்தவர் வெளியே தலைநீட்டி பான்பராக்கையோ குட்காவையோ துப்பினார்.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவிலுள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது," என்று விபத்தை பார்த்து ஓடி வந்து உதவிய தனியார் பாதுகாவலர் மகாவீர் தெரிவித்துள்ளார்.

கஸானாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேல் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள தனியார் மருத்துமனைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை மாற்றப்பட்டுள்ளதாகவும் அருகில் வசிப்பவர் கூறியுள்ளார்.

More News >>