தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் கொலைவெறி தாக்குதல்

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, இன்று அதிகாலை கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 6 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அதி வேக படகில் சிங்கள மீனவர்கள் அங்கு வந்தனர்.

அரிவாள் மற்றும் உருண்டையான கட்டைகளை கொண்டு, தமிழக மீனவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். படகின் உரிமையாளர் கண்ணன் மீது சிங்கள மீனவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கண்ணனுக்கு கை,கால்கள் முறிவு ஏற்பட்டுள்ளது.

படகில் இருந்த மீன்கள், வலைகள், ஜிபிஎஸ் கருவி என 4 லட்சம் மதிப்பிலான பொருட்களை சிங்கள மீனவர்கள் பறித்து சென்றனர். உயிருக்கு அஞ்சிய மீன்வர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

காயம் அடைந்த மீனவர் கண்ணன் நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

More News >>