விமர்சனம்: சாதி வெறி பிடித்தவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பரியேறும் பெருமாள்!

இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ், சாதி வெறி பிடித்து, ஆணவக் கொலைகள் எனும் பெயரில், தாங்கள் பெத்த பிள்ளைகளையே கொல்லும் கொடூர நெஞ்சு படைத்த பெற்றோர்களுக்கு சவுக்கடி பாடம் நடத்தும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ளார்.

வெள்ளியன்று வெளியான பரியேறும் பெருமாளை பார்த்த அனைவரும், சிறந்த கருத்துள்ள படம் என்று பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தில், பரியாக கதிரும், நாயகியாக ஆனந்தியும் நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம்.

படம் சொல்லும் பாடம் என்ன?

வழக்கறிஞருக்கு படிக்கும் பரி, ஆங்கிலம் தெரியாமல் தவிக்கும் மாணவனாக தனது எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். அவருக்கு, ஆங்கிலம் சொல்லித் தரும் கல்லூரி தோழியாக வருகிறார் ஆனந்தி. இருவரின் நட்பை, அறிந்த பெண் வீட்டார் சாதி பிரச்னையை கிளப்பி, அவனை கொல்லும் முயற்சியில் இறங்குகின்றனர். இத்தனை துயரையும் தாண்டி பரியேறினாரா பெருமாள் என்ற க்ளைமேக்ஸுடன் படம் முடிகிறது.

படித்து பெரிய இடத்திற்கு வந்தவர்களும், சாதியின் நிழலிலேயே ஏன் நிர்கின்றனர். தொழில் ரீதியாகத்தானே சாதிகள் பிரிக்கப்பட்டன. வக்கீலுக்கு படிப்பவன், அப்போ வக்கீல் சாதிதானே, என பல்வேறு குறியீடுகளை கொண்டு படம், சாதி மற்றும் ஆணவ கொலை களுக்கு எதிராக சவுக்கை சுழட்டியுள்ளது படம். பார்ப்போரின் நெஞ்சை வருடும் காட்சிகள் படம் முழுக்க இருக்கிறது. ஜெனரல் ஆடியன்ஸின் ஒரே ஆறுதலாக யோகி பாபுவின் காமெடி மட்டும் அவ்வப்போது வந்து செல்கிறது.

ஊர் பெயரை வைத்தே ஜாதியை கண்டு பிடிக்கும் இடம், ராகிங் செய்யுமிடத்தில், ஆனந்தியின் முகத்தை பார்த்து, அவள் நம்ம ஆளு என்று சொல்லும் இடங்கள் சாதி எதுவரை வேரூன்றி உள்ளது என்பதை கண்முன்னே காட்சியாக்கியுள்ளது.

ஆனந்தியுடன் கதிர் பேசக் கூடாது என்பதற்காக, அவனை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அவன் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் நெஞ்சில் ஓங்கி அறைகின்றன.

கருப்பி என்ற கதிர் வளர்க்கும் நாய் இறப்பது. இறுதியில், அது மேகத்தில், நீல நிழலாக தோன்றுவது என பல குறீயிடுகளை கொண்டு நல்ல தமிழ் சினிமா கிடைத்துள்ளது என்ற பெருமையை அடையச் செய்கின்றது.

செக்கச் சிவந்த வானம் என்ற மாபெரும் ஸ்டார் காஸ்ட் படத்திற்கு இடையே, பாராட்டை பெற்று வரும் பரியேறும் பெருமாள், நல்ல வசூலையும் பெற வாழ்த்துகள்!

More News >>