வடசென்னை படத்திற்கு சீனாவில் கிடைத்த கெளரவம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படம், அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் மாபெரும் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது. இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் படம் என்ற கெளரவத்தை வடசென்னை பெற்றுள்ளது.

தனுஷின் வுண்டார்பார் நிறுவனம் தயாரிக்க, லைகா இணை தயாரிப்பில் இணைந்துள்ளது. மூன்று பாகங்களாக வடசென்னை படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதன் முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பின்னர் வடசென்னையில் மூன்றாவது முறையாக தனுஷ் இணைந்துள்ளார். முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில், அவர் நடிக்க மறுத்ததால், அமீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகை சமந்தா நாயகி என அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரும் வடசென்னையில் குடியேற மறுக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக கமீட்டானார். அமீரின் மனைவி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், சமுத்திரகனி, கிஷோர் என வெற்றிமாறனின் டீம், இப்படத்திலும் இணைந்துள்ளது.

படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், சீனாவில் நடக்கும் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்படவுள்ளது. உலகளவில் பிரபலமான இந்த திரைப்பட விழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதன் மூன்றாம் நாளில் வடசென்னை படம் திரையிடப்படுகிறது.

சீனாவின் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் சினிமா என்ற கெளரவத்தை தனுஷின் வடசென்னை பெற்றுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

More News >>