சமூக வலைதளங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள வாக்குறுதி

தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் தங்கள் தளங்கள் வழியாக பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.

இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருதப்பட்டுகின்றது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப்பேசினார்கள்.

அப்போது, “தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் தங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு, அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான எதையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் வெளியிடுகிற விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அவற்றின் கட்டண விவரத்துடன் தங்கள் தளங்களில் தெரிவிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

More News >>