குட்கா வழக்கில் கைதான 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த மாதம் 5ஆம் தேதி சோதனை நடந்தது.

பிறகு, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் 5 பேரை சிபிஐ கைது செய்தது.

இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More News >>