மீனவர்கள் கைது எதிரொலி: தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகம், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த மாதம் ஈரான் கடற்படையினரால் மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், ஈரானில் உள்ள கிஷ் தீவில் கடந்த ஒரு மாதமாக படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் பெரிதும் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரையும் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

More News >>