தினகரன் உருட்டும் அரசியல்பகடை- அ.தி.மு.கவை பிரித்தாள சூழ்ச்சி ?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சருடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டி.டி.வி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தினகரனை சந்தித்து பேசியதாகவும், முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்த தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே தினகரன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரை சந்தித்தது உண்மை தான் என ஒப்புக்கொண்டார். தினகரன் மிக தரக்குறைவான அரசியலை செய்துவருவதாகவும், இனி அவருக்கு வெற்றி இல்லை வருகிற இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெல்லும் என்றார்.

"கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது. ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் சூழ்ச்சி செய்கிறார்" என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தினகரன் அரசியல் பகடையை உருட்ட தொடங்கியுள்ளார். சூழ்ச்சி வலையில் சிக்கி அதிமுக பிளவுபடுமா, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவார்களா என்பதை காத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More News >>