புயல் எச்சரிக்கை- குமரி மீனவர்கள் கரை திரும்ப சிறப்பு ஏற்பாடு

புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள குமரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குமரி, கேரளா அரபிக்கடலில் ஆழ்கடலில் சுமார் 10-முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற புயல் உருவாகும் சூழல் நிலவுகிறது. எனவே மீனவர்கள் அக்டோபர் 6-ம் தேதி முதல் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அரசின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, 200 படகுகள் கரை திரும்பின. 100-க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பவில்லை. அதில் சுமார் ஆயிரம் மீனவர்கள் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களை கரை திரும்ப செய்ய தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற அரசு, கடலில் தங்கியிருக்கும் மீனவர்களுக்கு, ஹெலிகாப்டர், ராணுவ கப்பல், சேட்டிலைட் போன் மற்றும் தனியார் கப்பல்கள் மூலம் தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர கால தொலைபேசி எண்களுடன் அதிகாரிகள் கொண்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குளச்சல் மீன் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

More News >>