முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்புவரை 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 3474 கனஅடியாக இருக்கும் நிலையில், அணையிலிருந்து 1550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்துசேருகிறது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட மூலவைகையாற்று நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்வரத்தும் தொடர்ந்து உயர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது 59.58 அடியாக இருக்கும் வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் தனது முழு கொள்ளளவான 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை கருதி ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் அணைகளின் நீர் இருப்பை பதிவு செய்யுமாறு அணை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

More News >>