புனே பேட்மிண்டன் அணிக்கு ஓனரான டாப்ஸி!

பேட்மிண்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள நடிகை டாப்ஸி, புனே பேட்மிண்டன் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பேட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பேட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

5வது சீசன் பேட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.

 

More News >>