துணை வேந்தர் நியமன ஊழல் குற்றச்சாட்டில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் துணை வேந்தர் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அதாரப்பூர்வமாக பேசிய தமிழக கவர்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து விட்டுத் திரும்பிய மறு நாளே இப்படியொரு ஊழல் புகாரை சுமத்தியிருக்கிறார் என்றால், முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரத்தில் துணை வேந்தர் நியமனம், டெண்டர் ஊழல் உள்ளிட்ட அதிமுக அரசின் மீது திமுக சுமத்தி வரும் ஊழல்கள் அனைத்தும் உண்மை என்பது இப்போது அரசியல் சட்ட பதவி வகிக்கும் ஆளுநர் குற்றச்சாட்டிலிருந்து நிரூபணமாகியிருக்கிறது. ஆனால் ஊழல் பற்றி ஆளுநர் இப்படி பொதுமேடைகளில் பேசுவதற்குப் பதில், கடந்த ஒரு ஆண்டு காலத்தில் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் இந்த ஊழல் அதிமுக அரசு வீட்டுக்குப் போயிருக்கும்.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டே நடந்து விட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீது 3,120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் நானே சென்று நேரடியாக அளித்துள்ளேன்.

ஆனால் அதிமுக அரசின் மீதான இந்த ஊழல் புகார்கள் மீது ஆளுநர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? அதிமுக என்ற ஊழல் அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநருக்கு தடை போடும் சக்தி எது? தமிழக ஆளுநர் பதவியில் ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ள ஆளுநர், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கையும் எடுக்கத் தவறி அதிமுக அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுநர் “துணை வேந்தர்கள் நியமன ஊழல்” பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆகவே துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்க காரணமான உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அது தவிர திமுக சார்பில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் அனைத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>