கணவன் கண்டுக்கொள்ளாததால் ஆத்திரம்: குழந்தையை கொன்று ஏரியில் வீசிய கொடூர தாய் கைது

சென்னையில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு, காணவில்லை என்று நாடகமாடிய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, வேளச்சேரி திரவுபதி அம்மன் கோயில் 5வது தெருவை சேர்ந்தவர் வெங்கண்ணா (32). கால்சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், வெங்கண்ணா மற்றும் உமா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூங்கினார். நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டதை அடுத்து, கதவை திறந்து வைத்து தூங்கினர். காலை விடிந்ததும் எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்தனர்.

இருவரும், அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.பின்னர், இதுகுறித்து தம்பதி போலீசில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கண்ணா மற்றும் உமாவிடம் விசாரணை நடத்தினர். இதில், உமா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையே, போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, உமா குழந்தையை ஏரி அருகே தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, உமாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், குழந்தை பால்குடிக்கும்போது தனக்கு மார்பகத்தில் ஏற்பட்ட வலி தாங்க முடியவில்லை. இதுகுறித்து கணவரிடம் பல முறை கூறியும் அவர் கண்டுக் கொள்வதாக இல்லை. அதனால், குழந்தையைக் கொலை செய்துவிட்டு ஏரியில் உடலை தூக்கி வீசிவிட்டேன் என்று தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, உமாவை கைது செய்த போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

More News >>