மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

சென்னை விமானநிலையத்திற்கு வந்த மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது சந்தேகத்தின் நிழல் படிந்தது. நிர்மலாதேவியின் ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் சில விரிவான கட்டுரைகள் வெளியாகின. இதனை காரணம் காட்டி, ஆளுநர் மாளிகை நக்கீரன் கோபால் மீது புகார் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமானநிலையம் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

அடையாறு துணை ஆணையர் தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>